Wednesday, 11 January 2012

கற்பனைக் கனவுகள்

கோடை வெயிலின் தாக்கம் உடலெங்கும் வியர்வையாய் வழிந்தது. புடவையின் கசகசப்பு, சட்னியை அரைத்து, தாளித்துக் கொட்டி இட்லிகளைத் தட்டில் இட்டு ஒவ்வொன்றாய்க் கொண்டு போய் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு நிமிர, முள்ளங்கிச் சாம்பார் கொதித்தது? தீபாவளிப் பட்சணங்கள் வேறு செய்ய வேண்டியிருந்தது. முதலில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கணவனையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டாள் மற்ற வேலைகள் இலகுவாய் இருக்கும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் காயத்ரீ!

காயத்ரீ! ஸ்கூல் வேன் வந்திடுச்சி!
ரவி! ஷைலு! பேகை எடுங்க! கலைந்திருந்த தலையைக் கோதிவிட்டு டையை டைட் செய்து குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டுத் திரும்பினாள் காயத்ரீ! அரைமணி முன்பு தந்த காபி டம்ளர் காய்ந்து போய் இருக்க, மதன் அமர்ந்து பேப்பரை மேய்ந்து கொண்டு இருந்தான். ஒரு பெருமூச்சோடு கணவனைப் பார்த்துவிட்டு அடுக்களைக்குள் விரைந்தாள் ஓய்வு ஒழிச்சல் இல்லாத பிழைப்பு. ச்சே! ஒரு சின்ன உதவி கூடச் செய்யக் கூடாது, மனம் வெறுத்துப் போனது. மணி ஒன்பது அடித்தது. இன்னேரம் அவன் குளித்து முடித்திருப்பான், அதற்குள் உடைகள் எல்லாம் தயாராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடே இரண்டாகிப் போகும். பார்த்தால் சாதுவாய் இருக்கும். அவனுக்கு ஆயிரம் கோபம் வரும் காயத்ரீ... ! டிபன் ரெடியா?

ம்... வர்றேன்! சப்தமிட்டுப் பேசக்கூடப் பிடிக்கவில்லை, இலேசாய்க் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. எத்தனை கவனமாய் முயன்றும் மதனிற்குப் பரிமாறிடக் கொண்டு வந்த முள்ளங்கிச் சாம்பார் பீங்கான் பாத்திரம் தரையில் விழுந்ததைத் தடுக்க இயலவில்லை காயத்ரீயால் ?!
காயத்ரீ கணவனின் குரல் காதோடு உரசிடும் பொழுதே நினைவிழந்தாள். மனைவியின் தலையை மடியில் இருத்தி கொண்டு கன்னத்தில் தட்டி, நீர் தெளித்து, இலேசாய் அவள் கண்களைத் திறந்த போதுதான் உயிர் வந்தது மதனிற்கு! கைத்தாங்கலாய் அணைத்துக் கட்டிலில் படுக்கச் செய்தான். என்னம்மா செய்யுது ? திடீர்னு மயங்கிட்டியே? ஆஸ்பிட்டலுக்குப் போவாமா?
வேண்டாங்க ! உங்கம்மா, உங்கக்கா எல்லாரும் ஊரிலிருந்து தீபாவளிக்கு வருவாங்க. பட்சணமெல்லாம் தயார் செய்யணும். வீடும் போட்டது போட்டபடியே இருக்கே? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.
சொன்னா கேட்க மாட்டியே... இரு வரேன். மதன் எங்கோ விரைந்தான் அடுக்களையில் ஏதோ பார்த்திரங்களின் சப்தம் எழுந்தது. கணவனின் பரிவான வார்த்தைகளில் இதமாய் உணர்ந்தாள். திரும்பிய மதனின் கையில் சூடாய் ஹார்லிக்ஸ் இருந்தது. இதைக் குடித்துவிட்டு தூங்கு காயத்ரீ !
அன்றைய தினம் முழுக்க அவளை விட்டு அகலாமல் இருந்தான் மதன். இத்தனை வருடத் தாம்பத்தியத்தில் மனைவிக்கென ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்காத மதனா இத்தனை அக்கறையோடு தன்னைக் கவனித்துக் கொள்வது எனும் நினைப்பில் மலைத்தாள் காயத்ரீ !
ஏன் அப்படி பாக்குறே காயத்ரீ! இன்னும் மயக்காவே இருக்கா ?
எத்தனையோ வேதனைகளையும் கஷ்டங்களையும் நான் தாங்கி இருக்கேன். அப்போ எல்லாம் ஒரு துரும்பைக் கூட அசைக்காத நீங்க .... நீர் தளும்பும் விழிகளோடு மனைவியைக் கண்ட மதன் ஆறுதலாய்த் தலையை வருடினான்.
பைத்தியம் என்னோட பளுவை நீ சுமந்தே! ஒரு ஆண் தன்னோட கடமையைச் சரியா செய்யக் காரணமே மனைவிதானே! வெளிப்படுத்தத் தருணம் உருவாகாததால் அன்பு இல்லைன்னு ஆயிடுமா என்ன?
கணவனின் இத்தனை அன்பும் அரவணைப்பும் தனக்குக் கிடைக்குமெனில், கடவுளே! எனக்கு அடிக்கடி உடல் நலமின்றிப் போகட்டும் என்று கடவுளைப் பிராத்திக்க துவங்கினாள் காயத்ரீ! யாரோ உலுக்குவது போல இருந்தது. கண்களைத் திறந்தாள் மதன் எதிரில் நின்றிருந்தான்
இப்போ பரவாயில்லையா காயத்ரீ?! இவர் எப்போது உடை மாற்றிக் கிளம்பினார் என்று யோசிக்கும் போதே? என்ன முழிக்கிறே காயத்ரீ?! நான் ஆபீஸ் போக லேட்டாகுது! குளிச்சி நானே டிரஸ் மாத்திக்கிட்டேன். எழுந்து லஞ்ச் பேக் ரெடி பண்ணு! குழப்பங்கள் நிறைந்த போதும் எழுந்து லன்ஞ் பாக்ஸ் ரெடி செய்தாள், அப்படியெனில் நடந்தவை யெல்லாம்.....? கேள்வி மிச்சமிருந்தது.
நீ போய் மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு !
ஏங்க எனக்கு உடம்புக்கு முடியலையே! ஒரு நாள் வீட்டிலேயே இருக்கலாமே?!
விளையாடாதே காயத்ரீ! லீவெல்லாம் எடுக்க முடியாது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வேலையைப் பாரு அம்மாவும் அக்காவும் நைட்டு வந்திடுவாங்க. தவிரவும், நானென்ன டாக்டரா? அவள் பதிலை எதிர்பாராமல் போய்விட்டான்.
காயத்ரீ சோர்ந்து போய் அமர்ந்தாள். இருந்தாலும் பெண்களுக்கே உரிய குணம் போல் அவருக்க ஏதும் அவசர வேலையிருக்கும். இல்லேன்னா போக மாட்டாரு என்று மனதைக் கட்டுப்படுத்திட முயன்று தோற்றாள், கீழே சிதறிக் கிடந்த குழம்பைப் போல் மனமும் சிதறியது. திருமணம் எனும் பேரில் சகலமும் துறந்து உழைப்பையும், உடலையும் தந்து உணர்வையும் இழந்து தவிக்கும் மனைவியின் மனதை என்றுதான் ஆண்கள் உணரப் போகிறார்களோ?!
இது காலங்காலமாய்த் தொடரும் நிகழ்வு என்பதை ஏற்க இயலாமல் தவித்து மறுகினாள் காயத்ரீ. இந்தியப் பெண்கள் எப்போதும் தங்கள் கற்பனைகளோடே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் அல்லவா?

No comments:

Post a Comment